Admission : தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச மாணவர் சேர்க்கை முகாம்

Admission : விழுப்புரம் மாவட்டத்தில், அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஆண்டு தோறும் வழங்கப்படும் 25 சதவீதம் இலவச மாணவர் சேர்க்கை இடங்களுக்கான சேர்க்கை முகாம் நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், 180 தனியார் பள்ளிகளில் உள்ள எல். கே. ஜி. , மற்றும் முதல் வகுப்புக்கான, இந்தாண்டு இலவச ஒதுக்கீடு சேர்க்கை (25 சதவீதம்) 1, 933 இடங்களுக்கு, இந்த கல்வியாண்டில் தகுதி வாய்ந்த 4, 010 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக விளிம்பு நிலை தொழிலாளர்கள், ஆதரவற்றோர், துாய்மை பணியாளர்கள் என சமூகத்தில் பின் தங்கிய ஏழை மாணவர்களுக்கு, அரசு விதிகள்படி, கல்வித்துறை அலுவலர்கள் முன்னிலையில், நேற்று காலை குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான தேர்வு நடந்தது.
விழுப்புரம் இ. எஸ். மெட்ரிக் மேல்நிலை பள்ளி மையத்தில் நடந்த மாணவர் சேர்க்கை தேர்வு முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பங்கேற்றார். பள்ளி முதல்வர் லலிதா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
அந்த பள்ளியில் மொத்தமுள்ள 19 சேர்க்கை இடங்களுக்கு, குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு நடந்தது. இதே போல், மாவட்டத்தில் உள்ள பிற தனியார் பள்ளிகளிலும், கல்வி அலுவலர்கள், பெற்றோர் முன்னிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், இலவச மாணவர் சேர்க்கை முகாம் நடந்தது.