Villupuram: மானிய விலையில் பம்பு செட் கருவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

Villupuram: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், விவசாயிகள் பம்பு செட்களை வீட்டிலிருந்தபடியே கைப்பேசி மூலம் இயக்கும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், மின்சார பம்பு செட் திருட்டை தடுக்க முடியும். விவசாயப் பாசனத்துக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். மோட்டார் பம்புசெட் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் இயக்க வேண்டும் என்பதற்கு டைமர் வைக்கும் வசதிகளும் இதில் உள்ளன.
தொலைதூரத்தில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணற்றில் உள்ள நீர் மூழ்கி பம்புகளை இயக்கி கண்காணிக்கும் வகையில், இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப்பிரிவினருக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ. 5 ஆயிரம் மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ. 7 ஆயிரம் இவை இரண்டில் எது குறைவோ அவை மானியமாக வழங்கப்படும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, விழுப்புரம் வழுதரெட்டி மற்றும் திண்டிவனத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்கள் அலுவலகங்களை நேரிலோ அல்லது 04146 258951, 04147 294486 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.