Villupuram: ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு பாலத்தில் தொடரும் குழப்பம்

Villupuram: விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பில், சென்னை – திருச்சி மார்க்கம், புதுச்சேரி – நாகை மார்க்கம், விழுப்புரம் மார்க்க பகுதிகளை இணைக்கும் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் தற்காலிகமாக வாகனங்கள் செல்கின்றன.
பல்வேறு சாலை சந்திப்புகள் உள்ளதால் வழிகாட்டி பலகைகள் அமைத்துள்ளனர். இருப்பினும், மேம்பாலம் பகுதியில் குழப்பம் நிலவுவதால், சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. திருச்சி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம், புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகள், பாலத்தின் கீழே இறங்கியவுடன், போதிய தகவல் பலகை இல்லாமல், குழப்பம் அடைகின்றனர். புதுச்சேரி சாலைக்கு செல்வதற்கு வலது புறமாக திரும்பி, ஒரே சாலையில் எதிரெதிராக செல்ல வேண்டிய ஆபத்தான நிலையில் திருப்பி விடப்படுகிறது.
அங்குள்ள இடதுபுற சாலையில் அருகே கிராம சாலைகளுக்கு மட்டும் பிரித்து விடப்பட்டுள்ளது. இதனையறியாமல் புதுச்சேரி மார்க்க வாகன ஓட்டிகள் பலர் இடதுபுற சாலையில் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பாலத்திற்கு கீழ் இறங்கிச் செல்வதற்கு குழப்பமான சூழல் உள்ளதால், கார், வேன், இலகுரக வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். புதிய மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் குழப்பமான சூழலை போக்க, போலீசார் நியமிக்க வேண்டும்; போதிய அளவில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.