Villupuram: நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Villupuram: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் மேல் ஒலக்கூர் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கிடங்கு எதிரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநில விவசாயிகள் விழிப்புணர்வு சங்க மாவட்ட செயலர் எல். வெங்கடேசன் வரவேற்றார். சங்கத் தலைவர் ரிஸ்வான் அகமதுல்லா, மாநில செயலர் அய்யனார், காங்கிரஸ் விவசாய அணி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் அ. ஜோலாதாஸ், விவசாய சங்கச் செயலர் ஆ. ஏழுமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வேளாண் அலுவலர்கள் செந்தில்ராம், விஜயகுமார், செல்வநிதி, எழுத்தர் ஹவாமாபீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வியாபாரிகளை தவிர்த்து அனைத்து விவசாயிகளும் முன் பதிவு செய்து விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து பயன்பெறலாம் என வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்