Smart Meter: ஸ்மார்ட் மீட்டருக்கு மின்ஊழியர்கள் எதிர்ப்பு; தனியார்மயமாகும் எனக்கூறி பிரசாரம்

240

Smart Meter: ”தமிழக மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டால் வேலைவாய்ப்பு, மின்கட்டண உயர்வு ஏற்படும் என்பதால் அனுமதிக்கக் கூடாது” என மின்வாரிய சி.ஐ.டி.யூ., ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தமிழக மின்வாரியத்தில் 2020 கணக்கீட்டுப்படி 2.21 கோடி வீடுகள், 34.29 லட்சம் வணிக பயன்பாடுகள், 7.10 லட்சம் தொழிற்சாலைகள், 21.21 லட்சம் விவசாய மின்இணைப்புகள் உட்பட குடிசை, தெருவிளக்குகள், இதர இனங்கள் என மொத்தம் 3.7 கோடி மின்இணைப்புகள் உள்ளன. இவற்றை டிஜிட்டல் மின் மீட்டராக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாதாரண மீட்டரில் மின்நுகர்வு அளவை கணக்கிட ஊழியர்கள் தேவை. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் மீட்டரில் நுகர்வுக்கேற்ப யூனிட் பதிவாகும் என்பதால் கணக்கெடுக்க ஊழியர்கள் தேவையில்லை. துல்லியமாக கணக்கிடலாம் என்பதுடன் தேவை, நேரத்திற்கேற்ப கட்டணத்தை மாற்றி அமைத்து கணக்கிடவும் முடியும்.

இந்த மின்மீட்டரை அறிமுகப்படுத்தும் வகையில் ஓராண்டுக்கு முன் சென்னையில் 2 கோட்டங்களில் முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவைக் கொண்டு விரைவில் மாநில அளவில் டிஜிட்டல் மீட்டரை அறிமுகப்படுத்த உள்ளனர்.

அரசின் இம்முடிவுக்கு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.,) உட்பட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழகம் முழுவதும் திறந்தவெளி கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை நகர் திட்டச் செயலாளர் அறிவழகன் கூறியதாவது: மின்வாரியத்தில் எல்லா தரப்பிலும் 48 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் வேலைவாய்ப்புக்கு மேலும் பாதகம் ஏற்படுத்தும்.

தொழிற்சாலைகளைப் போல ‘பீக் அவர்’ கட்டணம் வீடுகளுக்கும் வரும். வீடுகளுக்கு நுாறு யூனிட், விவசாயத்திற்கு இலவசம் போன்ற சலுகைகள் ரத்தாகும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பின் 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பை தனியாரே மேற்கொள்வர். படிப்படியாக கட்டணம் வசூல் உள்ளிட்ட எல்லா பணிகளும் தனியாருக்கே சென்றுவிடும் என்றார்.

You might also like