Marakkanam: மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

Marakkanam: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் 40 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவ கிராமங்கள் 87 கி.மீ. நீள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் 29,745 மீனவர்கள் வசித்து வருகின்றனர். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, விழுப்புரம் மாவட்டத்தின் அழகன்குப்பத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆலம்பரைகுப்பத்திலும், மீன்பிடித் துறைமுகங்கள் ரூ.235 கோடியில் அமைத்திட மாநில அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பணிகள் முடிவுற்ற நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது, மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் நித்தியபிரியதர்ஷினி, உதவிப் பொறியாளர் முத்தமிழ்செல்வி, மரக்காணம் வட்டாட்சியர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.