வளவனூர் : கழிவுநீர் தொட்டியில் மூதாட்டியின் சடலம் – சிறுவன் கைது.

விழுப்புரம் அருகே மூதாட்டியை கொலை செய்து அந்த சடலத்தை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றதாக 17 வயது சிறுவனை வியாழக்கிழமை இரவு அன்று போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அடுத்த வி அகரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்லபாக்கியம். இவருக்கு வயது 65. இவர் கடந்த 13ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின்பேரில் போலீசார் வியாழக்கிழமை அன்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில் செல்ல பாக்கியத்தை அந்த சிறுவன் தான் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது :
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்த மூதாட்டி செல்லபாக்கியம் வைத்திருந்த ரூபாய் 2000 பணத்தை அந்த சிறுவன் திருடி இருக்கிறார். திருடிய தனது பணத்தை அந்த பாட்டி திருப்பி தருமாறு அந்த சிறுவனிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி இரவு அதே கிராமத்தில் தனது பாட்டியின் வீட்டில் இருந்த அந்த சிறுவனிடம் செல்ல பாக்கியம் மீண்டும் தனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
அப்பொழுது ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தாக்கியதில் செல்ல பாக்கியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்பு அந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள கதிர்வேல் என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் செல்லபாக்கியத்தின் உடலை வீசி சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கழிவுநீர் தொட்டியில் சடலமாக கிடந்த மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதனை கொலை வழக்காக பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.