மரக்காணம் : வாக்கு பதிவு இயந்திரம் பழுது- வேட்பாளர்கள் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி, சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி என பல்வேறு பணிகள் துரித முறையில் நடைபெற்று வருகின்றன.
தற்போது Marakkanam பேரூராட்சியில் வைக்கப்பட்டிருந்த 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளதாக கூறி வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Marakkanam பேரூராட்சியில் மொத்தமாக 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளிலும் ஓட்டுப்பதிவுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து 24 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இருபத்தி நான்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் மரக்காணம் பேரூராட்சியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 50க்கும் அதிகமான வேட்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது காரணமாக வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தாமதமானது.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேட்பாளர்களிடம் வேறு 10 ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் வரவழைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறி சமாதானப்படுத்தினர்.