விழுப்புரத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி | வானூர் – பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு

810

வானூர் தாலுக்காவில் சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் தாலுகா எறையூர் அடுத்த அம்புலுக்கை கிராமத்தை சேர்ந்தவர் வைகுண்டவாசன். இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

மாவட்ட கலெக்டர் வளாக நுழைவு வாயில் முன்பு இருவரும் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர்கள் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு சரஸ்வதியையும் கீர்த்தனாவை தடுத்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கி வைத்துக் கொண்டனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு இருவரின் மீதும் தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து போலீசார் இருவரையும் விசாரணை செய்தனர்.

சரஸ்வதி கூறுகையில் அவரது கணவர் பெயரில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் நிலத்திலேயே விவசாய கிணறு ஒன்று இருக்கிறது.

எனது கணவரின் அறியாமையைப் பயன்படுத்தி அவரது உறவினர்களில் ஒருவர் எங்களை ஏமாற்றிவிட்டார்.

எங்கள் கிணற்றுக்கு மின் மோட்டார் இணைப்புக்கான சர்வீஸ் வாங்கி தருவதாக கூறி போலி ஆவணம் தயாரித்து எங்களது விவசாய கிணற்றை அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது எங்களை மிரட்டி வருகிறார். கலெக்டர் அவர்கள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதைக்கேட்டறிந்த போலீசார் இத்தகவலை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது என தாய் மகள் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இச்சம்பவத்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு சற்று பரபரப்பு நிலவியது.

 

பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் வேல்விழி. இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் தனது ஆண்ட்ராய்ட் செல்போனில் யூ நோ செயலியில் தனது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வேல்விழியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

mobile phone ower cyber crime fraud in vikravandi

புதிய கிரெடிட் கார்டு தருவதாக கூறி அந்த மர்ம நபர் வேல்விழியிடம் உங்களது அக்கவுண்டில் தொகை குறைவாக உள்ளதால் கார்டை வழங்க முடியவில்லை என்று கூறியுள்ளார் .

இதனால் வேல்விழி 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது அக்கவுண்டில் டெபாசிட் செய்துள்ளார். இதன் பின்னர் அந்த நபர் வேல்விழியிடம் OTP எண்ணை பெற்றுக்கொண்டுள்ளார்.

OTP எண்ணை பெற்றுக்கொண்ட அந்த மர்மநபர் ரூபாய் 20 ஆயிரத்தை ஏமாற்றி நூதனமாக திருடியுள்ளார்.

வேல்விழி இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் திருட்டு சம்பவம் செய்த அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதுபோன்று யாரேனும் OTP எண்ணை கேட்டால் தரக்கூடாது என வேல்விழியை அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

You might also like