Tindivanam: ரயில் நிலைய வழி மூடல் திண்டிவனத்தில் மக்கள் பாதிப்பு

Tindivanam: திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்ல மேம்பாலம் அருகே பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதுமட்டுமின்றி பி. எஸ். என். எல். , அலுவலகம் மற்றும் காவேரிப்பாக்கம் தரைப்பாலம் வழி என 3 வழிகள் உள்ளது. இந்த 3 வழியையும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர்.
இதில், காவேரிப்பாக்கம் தரைப்பாலம் அருகே உள்ள வழியை நகர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். பயணிகள் செல்லும் இந்த வழியில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்கள் கோழிக்கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வந்தனர். இதே போல் பலர் குப்பைக் கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தனர்.
மேலும், ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழி இருள் சூழ்ந்து இருப்பதால், இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வந்தது. இதன் காரணமாக சமீபத்தில் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி, தற்காலிகமாக மண் மற்றும் கருங்கல் வைத்து மூடப்பட்டது.