Students Affected Due To Rain Water Entering Nallavoor School : நல்லாவூர் பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் பாதிப்பு.

Students Affected Due To Rain Water Entering Nallavoor School : நல்லாவூர் பள்ளியில் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் பாதிப்பு.
நல்லாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்ததால், மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டனர். கிளியனுார் அடுத்த நல்லாவூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 111 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக வானுார் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள நல்லாவூர் ஊராட்சி பள்ளியின் வகுப்பறைக்குள் ஏரியின் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனிடையே நேற்று காலை மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் மாணவ, மாணவியர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல், வெளியில் காத்திருந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், அப்பகுதியில் உள்ள துப்புரவு பணியாளர்களின் உதவியோடு, வகுப்பறைக்குள் இருந்த தண்ணீரை அவசர அவசரமாக வெளியேற்றினர். அதன் பிறகே மாணவ, மாணவியர்கள் வகுப்பறைக்குள் சென்றனர்.
இது குறித்து தலைமையாசிரியை கூறுகையில், இந்த பள்ளி ஏரிக்கரையோரம் செயல்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் இருப்பதால், கனமழையின் போது தண்ணீர் ஊறி வகுப்பறையில் தண்ணீர் தேங்குகிறது. இது குறித்து அப்பகுதி தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் வகுப்பறையின் தரையை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.