villupuram: கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்

villupuram: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்குரிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை. இந்நிலையில் கரும்புக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் (சிபிஐஎம் சார்பு) ஆலை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி தலைமையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தனியார் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்கள் ஆலையின் முன்பு தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கரும்பு விவசாயிகளுக்குரிய நிலுவைத் தொகை ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது