collector Office: கலெக்டர் அலுவலகம் எதிரே ஊராட்சி தலைவர் திடீர் தர்ணா

185

collector Office: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே, ஊராட்சி தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வல்லம் ஒன்றியம், ஆனாங்கூர் ஊராட்சி தலைவராக ஏழுமலை மனைவி சங்கீதா(40) உள்ளார். இவர், நேற்று(அக்.2) பகல் 12: 15 மணியளவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அமர்ந்து, திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், குணசேகரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை, ஊராட்சி தலைவர் பணியை செய்ய விடாமல், சிலர் தடுப்பதாக கூறினார். மேலும், ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் சிலர், தன்னை தலைவர் நாற்காலியில் அமர விடாமல், தடுத்து மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

இதையடுத்து, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஆனால், தனக்கு உரிய தீர்வு கிடைக்காமல், போராட்டத்தை கைவிட முடியாது என 30 நிமிடம், சங்கீதா தர்ணாவை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, பெண் போலீசார், அவரை ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

You might also like