Top5 விழுப்புரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் செய்திகள்.

781

1)விழுப்புரத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலெக்டர் மோகன் விழுப்புரம் நகராட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அதில் ஒரு கட்டமாக விழுப்புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தையும் ஆய்வு செய்தார். 

அப்பொழுது வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது என பார்வையிட்டார்.

கலெக்டர் மோகன், தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் ஓட்டு போட வரும் வாக்காளர்கள் அமைதியாக வாக்களிக்க ஏற்ற வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தினார்.

2) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் – அமைச்சர் பொன்முடி.

விழுப்புரத்தில் நகராட்சி தேர்தலையொட்டி எம் ஆர் ஐ சி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தனது துணைவியார் விசாலாட்சி பொன்முடி மற்றும் மகன் டாக்டர் கவுதம சிகாமணி MP ஆகியோர் உடன் வாக்களிக்க வந்தார். வாக்களித்த பின்பு அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது : 

விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை  42 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்களும் அதிகப்படியான வெற்றியைப் பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது. மேலும் வாக்காளர்கள் இன்று காலைமுதல் அச்சமின்றி வாக்களித்து வருகின்றனர். இதை பார்த்தாலே தெரிகிறது மக்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள் என. இவ்வாறு கூறினார்.

3) ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம் ராமதாஸ் குற்றச்சாட்டு.

விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. பல கட்சி தலைவர்களும் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தங்களது பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அவ்வாறு திண்டிவனம் நகராட்சியில் 19வது வார்டில் உள்ள தாகூர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மனைவியுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த நகராட்சி தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு ஆயிரகணக்கிக்ல் என பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது, மேலும் பரிசு பொருட்களும் வழங் கப்படுகின்றன. இதனை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமானது செயல்படுகிறது எனக் கூறினார். இருந்தாலும் மக்கள் மீதுள்ள நம்பிக்கையால் பாமக அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என நம்புகிறேன் எனக் கூறினார்.

4) பணம் பட்டுவாடா பாமகவினர் மற்றும் போலீசார் மோதல்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் இன்று காலை முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வரிசையில் நின்று செலுத்தினர்.

இந்த நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியாக இருந்த கோட்டகுப்பம் தற்போதைய நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. கோட்டகுப்பம் நகராட்சியில் இதுவே முதல் நகராட்சி தேர்தலாகும். இந்த தேர்தலில் 145 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த நகராட்சியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 24083. இதில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கள் முறையே 11760, 12321. மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் உள்ளனர்.

நகராட்சிக்கு உட்பட்ட பெரிய முதலியார் சாவடியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதுபற்றி அறிந்ததும் முதலியார் சாவடி அமைந்துள்ள இரண்டாவது வார்டு பாமக வேட்பாளர்  அங்கு விரைந்து சென்றார். அப்போது பாதுகாப்பு பணிக்காக அங்கு நின்றிருந்த போலீஸாரிடம் எப்படி வாக்காளர்களுக்கு பணம் வழங்க அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் இங்கு யாரும் யாருக்கும் பணம் வினியோகிக்க வில்லை என கூறினர்.

இதன் காரணமாக பாமக வேட்பாளருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த பாமகவினர் அங்கு விரைந்தனர் இதனால் அந்தப் பகுதியானது சற்று பதட்டமாக காணப்பட்டது.

தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் அவர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பாமகவினரை சமாதானப்படுத்தினர். மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர்.

5)அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்த விழுப்புரம் கலெக்டர்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு எவ்வாறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அவர்கள் விளக்கம் கொடுத்தார்.

You might also like