Veedur dam: திண்டிவனம்: முழு கொள்ளளவை எட்டிய வீடூர் அணை

Veedur dam: கடந்த 15 தினங்களுக்கு முன்னர் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது. அணை பாதுகாப்பு கருதி கடந்த 18ம் தேதி வரை உபரி நீரை வெளியேற்றி வந்தனர்.
அதன் பிறகு அணைக்கு நீர் வரத்து முற்றிலும் குறைந்தது. நேற்று (டிசம்பர் 21) காலை 6.00 மணிக்கு வினாடிக்கு 610 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. இரவு 7.00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 605 மில்லியன் கனஅடி (32 அடி)யில், 550.197 மில்லியன் கன அடி (31.300 அடி) இருப்பு உள்ளது. இது அணையின் கொள்ளளவில் 91 சதவீதமாகும்.
பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் அணையின் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.