விழுப்புரம் : இன்றைய விபத்து செய்திகள் (22-02-22)

1,015
  1. விழுப்புரம் அடுத்த வளவனூரில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

வளவனூர் அருகே உள்ள ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவரது நிலத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்பொழுது மின்கம்பி ஒன்று நிலத்தில் விழுந்து கிடப்பதை அறியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மின்கம்பியை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் இதுபோன்ற மின்கம்பிகள் விழுந்து கிடப்பதை மின்சார வாரியமானது உடனுக்குடன் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். அப்படி சரி செய்வதால் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2. மேல்மலையனூர் அருகே மின் கம்பி வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேல்மலையனூர் அடுத்த மேல்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கீழ்புதுபட்டில் தனது நிலத்தில் எலி தொல்லைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த மின்வேலியை தனது நிலத்தை சுற்றிலும் அமைத்திருந்தார்.

நேற்று மின்வேலியில் சிக்கி அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு வயது சுமார் 65 இருக்கும்.

அந்த அடையாளம் தெரியாத நபர் யாரென்று தெரியாததால் விஏஓ நரேந்திரன் அளித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் மின்சார வேலி அமைத்த பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத அந்த இறந்த முதியவரின் உடலை விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அந்த முதியவர் யார் என்ற விபரம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3. விழுப்புரத்தில் தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் அருந்தி தற்கொலை.

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவருக்கு வயது 60. விவசாயக் கூலித் தொழிலாளியான இவரது தாய் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.

தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து பல நாட்கள் மன உளைச்சலில் இருந்துள்ளார் முருகன். மேலும் மனமுடைந்த நிலையில் முருகன் கடந்த 13ம் தேதி விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

4. திருவெண்ணைநல்லூரில் ரயில் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லூர் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவருக்கு 17 வயதில் கிரிதரன் என்ற மகன் இருந்தார்.

விவசாய நிலத்திற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது கிரிதரன் விழுப்புரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கிரிதரன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like