முக்கிய அறிவிப்பு : விநாயகர் சதுர்த்தி குறித்து ஆட்சியர் அறிவிப்பு

774

விநாயகர் சதுர்த்தி வரும் புதன் கிழமை (ஆகஸ்ட் 31 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

நீர் நிலைகளை பாதுகாக்க :

நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் (www. tnpcb. gov. in) என்ற இணையதளத்தில் உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்,

நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.

சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிகிடையாது.

நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு வர்ணம் :

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அதாவது கிழக்கு கடற்கரையில் பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதி முறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நம் திண்டிவனம் Facbook &  Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like