Villupuram Police: ஆட்டோ திருடனைப் பிடித்த போலீசாரை பாராட்டிய விழுப்புரம் எஸ்பி

Villupuram Police: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் திருடுபோன டீசல் ஆட்டோவை ஒரு மணி நேரத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நெடுமாறன், ராமதாஸ், சுந்தர்ராஜ், பாலமுருகன், தலைமை காவலர் கலையரசன் ஆகியோர் கண்டுபிடித்து, பறிமுதல் செய்து, குற்றவாளியை கைது செய்தனர். இதே போன்று, வெள்ளிமேடுபேட்டை பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் முரளி, காவலர்கள் மணிகண்டன், திருமூர்த்தி, பாஸ்கர் ஆகியோர் அப்பகுதியில் கிராவல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து 2 லாரிகள், ஒரு ஜே.சி.பி., கைப்பற்றினர். மேலும், பெரியபாபுசமுத்திரம் அருகே வளவனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் கவுதமன், தேவநாதன், ஏட்டுராஜா, பிரதீப்குமார், தீனதயாளன் ஆகியோர், அப்பகுதியில் மணல் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். பணியில் தீவிரமாக ஈடுபட்டு பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரை எஸ்.பி., சரவணன், பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., திருமால் உடனிருந்தார்.