திண்டிவனத்தில் MP அன்புமணி ராமதாஸ் வாக்குப்பதிவு

மாநிலங்களவை உறுப்பினரும் பாமக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் திண்டிவனம் ரொட்டி கார தெருவில் உள்ள தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அவருடைய வாக்கை செலுத்தினார். அவருடன் வாக்குச்சாவடிக்கு அவருடைய மனைவி சௌமியா மற்றும் அன்புமணி அவர்களின் மகள் சம்யுக்தா ஆகியோரும் உடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்த பின்னர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
நகர்ப்புற தேர்தலானது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளுகின்ற மற்றும் ஆண்ட கட்சிகள் பாமக உள்ளிட்ட பிற எதிர்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வைக்கின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு கவுன்சிலர் 5 முதல் 10 கோடி வரை செலவு செய்கிறார். தமிழகம் முழுவதும் பல நகராட்சிகளில் இதே நிலைமைதான் நிலவுகிறது. இவ்வாறு செலவு செய்பவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள் நிச்சயமாக செய்யமாட்டார்கள் ஊழல் மட்டும் தான் செய்வார்கள் .
நகர்ப்புற தேர்தலில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனை தவிர்த்து வெளிப்படையான வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். இனிவரும் காலங்களில் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படாமல் அனைவரும் சுயேட்சையாக கருதப்பட்டு சுயேட்சை சின்னம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் நல்லவர்களையும் பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரம் இல்லாமல் பணம் இல்லாமல் தனித்து நின்று மூன்றாவது இடத்தை பிடித்தோம். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நகரமன்ற தேர்தலிலும் தனித்து நின்றுள்ளோம், இதிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இதுவரை எதுவுமே செய்யவில்லை. மாற்றத்திற்காக வாக்காளர்கள் பாமகவுக்கு வாக்களிப்பார்கள் என நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.