வனத்தாம்பாளையம் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

455

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள பண்ணக்குப்பம், வனத்தம் பாளையம், ஆழியூர் ஆகிய கிராமங்களில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பல்வேறு வகையான பறவைகளும் 200க்கும் மேற்பட்ட மயில்களும் மான்களும் அங்கு வசித்து வருகின்றன.

புதுச்சேரி-மாமல்லபுரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பறவைகள் சரணாலயமாக இருக்கின்ற இந்த நீர்நிலைகள் வழியாக சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது. 

அவ்வாறு நீர்நிலை வழியாக சாலை அமைக்கப்பட்டால் அங்கு வாழும் மீன்கள், மான்கள்,  மயில்கள் போன்றவை தண்ணீருக்காக வேறு இடம் செல்ல வேண்டியிருக்கும். பல அரிய உயிரினங்கள் அறியக்கூடும். 

எனவே இந்தப் பகுதியை சாலை விரிவாக்க அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு இயக்கத்தினர்,  விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குள்ள பொதுமக்கள் கூறியதாவது :

புதிதாக அமையவுள்ள சாலை பணிக்காக நீர்நிலைகள் நிறைந்த 2.5 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. சாலைப்போக்குவரத்தானது தேவையான ஒன்றுதான் இருப்பினும் இங்கு வாழும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு அவற்றை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமை தான்.

உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த சாலை பணியானது சற்று தள்ளி நிலப்பகுதியில் அமைக்கப்பட வேண்டும். இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

மேலும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் இந்த நீர்நிலை பகுதியில் சாலை அமைக்க கூடாது என விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போக்குவரத்து ஆணையர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த நீர் நிலையில் வாழும் மான் குட்டி ஒன்று அவ்வழியாக சென்ற காரில் அடிபட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இப்பகுதியை பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் வனத்தம் பாளையம், பண்ணக்குப்பம் இடையே உள்ள நீர்நிலைகளில் மயில்களும் மான்களும் வெளிநாட்டு பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்த ஏரியை தமிழக அரசானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதியில் வாழும் பொதுமக்களும் பறவைகள் பாதுகாப்பாளர்கள், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

You might also like