மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கலெக்டர் | Tindivanam News

மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கலெக்டர் – Tindivanam News
Tindivanam News : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை பார்த்த கலெக்டர் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். மேலும் கண்டக்டரை எச்சரித்தார்.
திண்டிவனம் அடுத்த சிப்காட் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய நேற்று மாலை திண்டிவனம் வழியாக சென்றார் கலெக்டர் மோகன்.
திண்டிவனம் சந்தைமேடு அருகே சென்ற தணியால் கிராமத்திற்குச் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனே பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கினார். மேலும் கண்டக்டரை எச்சரித்தார்.
அதனை தொடர்ந்து அங்கு இருந்தபடியே போக்குவரத்து கழக மேலாளர் உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பள்ளி விடும் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளில் இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டியில் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விக்கிரவாண்டியில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சில கடைகளில் இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் விக்கிரவாண்டியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகப்படியான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். அதனை அடுத்து மற்ற கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதோடு டெங்கு கொசு பரப்பும் வகையில் சுகாதாரமற்ற வகையில் கடை இருந்ததால் இந்த கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இத்தகைய பொருட்களை மக்களும் வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மக்களுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.
நில அளவையர் பணி நிறுத்தப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நில அளவையர் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நில அளவைத் துறையில் நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை 50% பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் களப்பணியாளர்கள், வரைவாளர், அமைச்சுப் பணியாளர்கள் ஒருங்கிணைக்கும் முன்மொழிவுகளை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில் நேற்று இருபத்தி மூன்றாம் தேதி முதல் 3 நாட்கள் வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நில அளவையர் வேலை நிறுத்தத்தால் நில அளவை தொடர்பான பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுபோன்ற திண்டிவனம் மற்றும் விழுப்புரம் சார்ந்த அரசியல், க்ரைம் மற்றும் அன்றாட நிகழ்வு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம் திண்டிவனம் இணையத்தை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.