Nam Tindivanam | இன்று கெர்போட்ட ஆரம்பம்

1,389

Nam Tindivanam | இன்று கெர்போட்ட ஆரம்பம்

Nam Tindivanam | இன்றைய தினசரி காலண்டரில் கெர்போட்ட ஆரம்பம் என்று ஒரு குறிப்பு உள்ளதே அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேஷ நாளா?

நீங்கள், சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது, ”கெர்போட்டஆரம்பம்” என்று இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.

சிலர் காலண்டரின் பின்பக்கம், என்றைக்கெல்லாம் தமிழக அரசு விடுமுறைன்னு பாக்கும் போது எலலாம், ”கெர்போட்ட நிவர்த்தி” என்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்.

இது எதும் விசேஷ தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல. உண்மையில் இது, தமிழர்களின் அடுத்த வருட மழைக் கணிப்பு முறை ஆகும்.

அதாவது “கரு ஓட்டம்” என்பதே, கர்ப்ப ஓட்டம் என்று மாறி பின்னர் கர்ப்போட்டம் என்றாகி, இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது.

நம்முடைய தமிழகத்தில், சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது. இது தவிர, வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும், பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.

அவ்வகையில், தனூர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது, பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில், கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள். இதனை, பெண்ணின் பத்து மாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள்.

மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள், ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள். அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து, அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்.

இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 29 முதல் ஐனவரி 12ம் தேதி வரை அமைகிறது.

மார்கழி மாதம் அமவாசை முடிந்து ,ஒருவாரத்தில் தொடங்கி அடுத்து வரும் பதினான்கு நாட்கள் ”கர்போட்ட நாட்கள்” என்று நினைவில் வைத்து கொள்வார்கள்.

இந்நாட்களில், லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால், மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு, நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில், கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ அல்லது கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால், அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்.

இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும், பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால் தான், ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது.

இந்த கர்போட்ட நாட்களை கணித்து, இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில், மானாவாரி (ஆற்று / ஏரிப்பாசனம் இல்லாத வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

You might also like