Tollgate: பட்டானுார் டோல்கேட்டில் வாகன ஓட்டிகள் மறியல்

Tollgate: நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், இரண்டு மாதங்களுக்கு முன் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலை, மொரட்டாண்டியில் உள்ள பட்டானூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், இங்கு கடந்த 4ம் தேதி முதல் சுங்க கட்டணம் அனைத்து வகை வாகனங்களுக்கும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் கார் ஒன்றுக்கு 55 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 65 ரூபாய், பஸ்களுக்கு 95 ரூபாய் பெறப்பட்ட நிலையில், தற்போது 105 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர்வாசிகளுக்கான வாகனங்கள், 20 கி.மீ. தூரத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாதம் 150 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 340 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
இதை கண்டித்து, நேற்று(நவம்பர் 6) காலை 11:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரோவில் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று, கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவித்த பிறகே, கட்டணத்தை உயர்த்தியதாக டோல்கேட் நிர்வாகம் தெரிவித்தது. போலீசாரின் சமரச பேச்சுக்குப்பின், அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.