Marakkanam: ஏரியில் இருந்து தனிநபர் தண்ணீர் எடுத்துச்செல்ல மக்கள் எதிர்ப்பு

161

Marakkanam: மரக்காணம் அடுத்த உள்ள கந்தாடு ஏரி ஓரத்தில் அரசு ஆழ்துளை கிணறு அமைத்து மரக்காணம் பேரூராட்சி மற்றும் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கந்தாடு ஊராட்சிக்குட்பட்ட கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் உவர்நீராக மாறியுள்ளது. இதனால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கந்தாடு பெரிய ஏரி அருகில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து பைப் லைன் மூலம் அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம், வருவாய்துறை மற்றும் சில அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதிகாரிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அனுமதி வழங்கியுள்ளனர். அதன் பின் அந்த விவசாயி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார். நேற்று (நவம்பர் 23) மதியம் ஜே. சி. பி. , இயந்திரம் மூலம் கொள்ளுமேடு சாலையோரம் பைப் லைன் அமைப்பதற்கான பள்ளம் தோண்டினார். இதனைப் பார்த்த கந்தாடு பழைய தெருவை சேர்ந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தி விவசாயியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மரக்காணம் வருவாய் ஆய்வாளர் வனமயில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பணியில் ஈடுபட்ட விவசாயியிடம் அதிகாரிகள் பணியை நிறுத்தி வைக்கும்படி கூறியதால் பணி நிறுத்தப்பட்டது.

You might also like