Vikravandi: விக்கிரவாண்டியில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து 27 பேர் காயம்

98

Vikravandi: அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத்தைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் 80 பேர் 4 ஆம்னி வேனில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்தனர். சுவாமி தரிசனம் செய்து, இரவு தங்கியவர்கள், நேற்று (டிசம்பர் 26) அதிகாலை அங்கிருந்து பழனிக்கு புறப்பட்டனர். அதில் ஒரு வேனை ராணிப்பேட்டை காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் மாதவன் ஓட்டினார். வேனில் 27 பேர் பயணம் செய்தனர். காலை 6.40 மணியளவில் வேன் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனை அருகே வந்தபோது, திடீரென அரசு டவுன் பஸ் சாலையை கடக்க முயன்றது.

வேன் டிரைவர் மாதவன், பஸ் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது, வேன் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த வேடல் கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்கள் உட்பட 27 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார், டோல் பிளாசா ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் 30 நிமிடம் சென்னை – திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like