Tindivanam: திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி

87

Tindivanam: திண்டிவனத்தில் நேரு வீதி, ஈஸ்வரன் கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, செஞ்சி பஸ்ஸ்டாண்டு பகுதி, ராஜாஜி வீதி ஆகியவை உள்ளன. இதில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், காய்கறி மார்க்கெட், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவை நேரு வீதியில் அமைந்துள்ளன. அதேபோல் மற்ற வீதிகளின் வழியாக அனைத்து அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளான நேரு வீதியில் மேம்பாலத்தின் துவக்க பகுதியிலிருந்து செஞ்சி ரோடு வரையில் சாலையின் இரு பக்கமும் கடைகள் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் நேரு வீதி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சுலபமாக கடந்து செல்ல முடியாது. இதற்கேற்றார்போல் நேரு வீதியில் போக்குவரத்து போலீசார் பல நேரங்களில் இல்லாமல் இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுவது தினந்தோறும் நடப்பது வாடிக்கையாக உள்ளது. முன்பெல்லாம் ஆண்டிற்கு ஒரு முறையாவது நகரப்பகுதியிலுள்ள போக்குவரத்து சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை போலீசாருடன் இணைந்து அகற்றுவது வழக்கம். தற்போது அந்த பழக்கம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாம் நிரந்தரமாக இடம்பிடித்த பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். திண்டிவனத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சியுடன் இணைந்து அதிகாரிகளும் சேர்ந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You might also like