Gingee: அரசு ஆவணங்களை ஒப்படைக்க கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு

323

Gingee: செஞ்சி அடுத்த ஜம்போதி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்கள் கிராமத்தில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 120 வீட்டு மனைகள் வழங்க நிலம் ஆர்ஜித்தம் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு மனைப்பட்டா வழங்காமல் அலைக்கழிக்கப்படுகிறோம்.

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் எங்களது ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர். பின் போலீசார் அறிவுரைப்படி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

You might also like