Israel Iran: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!
Israel Iran: ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
இஸ்ரேலுக்கும் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஓராண்டாகப் போர் நடந்து கொண்டிருக்கிறது.
காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இஸ்ரேல் படையினர் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது.
கச்சா எண்ணெய் விலை 1%க்கும் அதிகமாக உயர்ந்தன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
இஸ்ரேலின் தலைமை அத்தகைய தாக்குதலை நடத்த இறுதி முடிவை எடுத்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இது பற்றிய தகவல்களால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.
விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.