ISRO: ஒவ்வொரு மாதமும் ராக்கெட் ஏவும் திட்டம்; இந்த ஆண்டு இஸ்ரோவுக்கு மிகவும் முக்கியம்!

ISRO: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏவுதல் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது’ என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு முக்கியம்
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, நாராயணன் அளித்த பேட்டி: இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன் மூன்று ஆளில்லா பயணங்களுக்கான திட்டங்கள் இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஏவுதல் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் ஆளில்லா விண்வெளி பயணத்திற்கான பணி இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கிறது.
24 மணி நேரமும் பணி
ஏற்கனவே 7,200 க்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது. 3,000 சோதனைகள் இன்னும் நடக்க இருக்கிறது.
24 மணி நேரமும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2027ம் ஆண்டின் முதல் காலாண்டில் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும்.
சந்திரயான் 4, 5
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.
11,500 கி.மீ கடற்கரை மற்றும் வடக்கு எல்லையை இந்தியா கண்காணித்து வருகிறது.
சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஜப்பானுடன் இணைந்து சந்திரயான்-5, 100 நாட்கள் ஆயுட்காலம் கொண்ட 350 கிலோ எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும்.
சந்திரயான்-4, அடுத்த இரண்டரை ஆண்டுகளில் ஏவப்பட உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் நாடு இப்போது முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு நாராயணன் கூறினார்.